ஒருவருக்கு மட்டும் இருந்த கொரோனா – அவரும் குணமடைந்து வீடு திரும்பினார் – வைரஸ் இல்லாத நாடாக மாறியது ஏமன்
ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை ஏற்பட்டு வருகிறது. அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சண்டையில் ஏமன் அரசு படையினருக்கு சவூதி அரேபியா தலைமையிலான கூட்டு படையினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வருகிறது.
தற்போது உலகையே பயமுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஈரானிலும் பரவியது.உள்நாட்டு போரால் அதிக பாதிப்பை சந்தித்த ஏமனில் போதுமான அளவு மருத்துவ வசதி கிடையாததால் வைரஸ் பரவல் ஏற்பட்டு பெரும் உயிரிழப்பு ஏற்படும் என அனைவராலும் அஞ்சப்பட்டது.
அந்நாட்டின் ஹட்ராமொண்ட் மாகாணம் அஷ் ஷஹுர் என்ற நகரை சேர்ந்த 60 வயது நிரம்பிய அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கடந்த மாதம் 10-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.அதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவரது குடும்பத்தினரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவத்துறையினர் முற்பட்டனர்.
ஆனால் அந்த குடுமபத்தினர் யாரும் வைரஸ் பரிசோதனை செய்ய முன்வரவில்லை.அதனால் அவர்கள் அனைவரும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 120 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனவே ஒட்டுமொத்த ஏமனில் அந்த அரசு அதிகாரி ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த அரசு அதிகாரி சிகிச்சை முடிந்து குணமடைந்தார். இதையடுத்து அந்த நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டு குணமான நபரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு 21 நாட்களும் முடிவடைந்தது.இதனால் ஏமன் கொரோனா வைரஸ் இல்லாத நாடாக மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.