விஜயகாந்த் — புத்தாண்டு தினத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்
நீண்ட மாதங்களுக்கு பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டு தினத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார். மேலும், தேமுதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா தான் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தொண்டர்களிடம் ஆலோசனையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட மாதங்களுக்கு பிறகு அவர் வருகிற 1ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) புத்தாண்டு அன்று தொண்டர்களை சந்திக்க உள்ளார். அன்றைய தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி தொண்டர்களை சந்திக்கிறார். அப்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர் பொதுமக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.