இங்கிலாந்தில் ஒரே நாளில் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சிறிய நாடுகள் முதல் பெரிய வளர்ச்சி அடைந்த நாடுகள் வரை இந்த தொற்று வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.
தற்போது இங்கிலாந்திலும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகில் கொரோனா வைரஸ் அதிகமாக உள்ள நாடுகளில் இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. எத்தகைய வளர்ச்சி அடைந்த நாடுகளாக இருந்தாலும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது அனைவருக்கும் ஒரு சவாலாக தான் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,52,840 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 413 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 20,732-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.