8 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..! முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!
PM modi discussion with 8 chief ministers
டெல்லி:
கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காலத்தில் மாநிலங்களில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்து வருகிறது.
கொரோனா பரவல், ஊரடங்கு, பொருளாதார மேம்பாடு, மக்களுக்கான நிவாரண உதவிகள் போன்றவை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அந்த வகையில், தற்போது கொரோனா அதிகமாக பாதித்த 8 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார். அப்போது தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகளை அவர் முன்வைப்பார் என்று கூறப்படுகிறது.