ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு….! 2 பேர் பலி!
2 dead in Andhra Pradesh factory accident
விசாகப்பட்டினம்:
ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர்.
விசாகப்பட்டினத்தின் அருகே உள்ள பரவடாவில் தனியார் மருந்து தொழிற்சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது. விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். மேலும் 4 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் விசாகப்பட்டினத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விஷவாயுக்கசிவில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். நேற்று இரவு வாயுக்கசிவு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.
வாயுக்கசிவு விபத்து தொடர்பாக, அதிகாரிகளிடம் விசாரித்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை உடனடியாக மூடுமாறும் உத்தரவிட்டார்.