fbpx
RETamil News

கஜா புயல் எதிரொலி:ஐந்து மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை: கஜா புயல் நாளை மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க உள்ள நிலையில் கடலூர் உட்பட 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை மாலை கடலூர் மற்றும் நாகை இடையே  கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் உயர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே, நாகை மாவட்டத்தில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன்பிறகு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும் நாளை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலின் தாக்கம் மற்றும் மழை காரணமாக சுமார் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே படிப்படியாக மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு இன்று வெளியாகும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சென்னையும் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close