
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை தெறிக்க விட்டார்.
மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜக அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனது கருத்துகளை அழுத்தமாக தெரிவித்தார்.
அவர் மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிறார்.
ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறியும், வேலை வாய்ப்பை உயர்த்துவதாக கூறியும் மக்களை ஏமாற்றியுள்ளார்.
பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன.சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது.
தேசத்திற்கு எதிராக மட்டுமல்ல, அரசிலைமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் நடக்கிறது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரதமரும், அமித்ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள். அதிகாரங்கள் முழுவதும் அவர்கள் இருவரிடம் மட்டுமே இருக்கின்றன.
அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படாததால் அமைச்சர்கள் செயல்பட முடியாத நிலையில் இருக்கிறது.
மோடி என் கண்களை பார்த்து பதில் கூற வேண்டும். ஆனால், அதை அவர் தவிர்க்கிறார்.அவர் கண்களில் ஒரு பதட்டம் தெரிகிறது என ஆவேசமாக ராகுல் பேசினார்.
அவரின் பேச்சைக் கேட்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். பேசி முடித்த பின் பிரதமர் மோடியிடம் சென்றார் ராகுல்.
நன்றாக பேசினீர்கள் என மோடி கூற அவரை கட்டியணைத்துவிட்டு அங்கிருந்து ராகுல் சென்று தனது மேஜையில் அமர்ந்தார்.