சாத்தான்குளம் சம்பவத்தில் தேடப்பட்ட முத்துராஜ் கைது…! 3 பிரிவுகளில் வழக்கு!
Sathankulam case, police constable muthuraj arrested
தூத்துக்குடி:
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலைசெய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, மேற்கூறிய வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. போலீஸ் காவலில் விசாரணை நடத்தும்போது, எதற்காக தந்தை, மகனை இரவு முழுவதும் தாக்கினார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.