துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் விபத்து…! 19 பேர் பலி!
Kerala flight accident kills 19
திருவனந்தபுரம்:
துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம், விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 19 பேர் பலியாகினர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகையால், வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
அவர்களுக்காக மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகின்றனர். இந் நிலையில், நேற்று இரவு துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர்.
விமானத்தில் மொத்தமாக 2 விமானிகள், 2 பணிப்பெண்கள், பயணிகள் 184 பேர் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
தற்போது, கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
விபத்தில், விமானம் இரண்டாக உடைந்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புக்குழுவினர் விரைந்து வந்தன. இந்த கோர விபத்தில் 2 விமானிகள் ஒரு குழந்தை உட்பட 17 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடனும், 15 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.