வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைக்க 58 விமானங்கள்..! மத்திய அரசு அறிவிப்பு!
58 flight services for tamilians in abroad

டெல்லி:
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் உலகமே தவித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக குறைந்த அளவு விமானங்களை இயக்க முடிவு செய்தது.
ஆனால், சென்னை உட்பட தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், விமான சேவை தற்காலிகமாக தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனால், வெளிநாடுகளில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள், சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே முடங்கினர்.
இதனிடையே, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க, சென்னை விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்துக்கு 58 விமானங்கள் வந்தே பாரத் திட்டம் மூலம் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பால், வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
















