அமெரிக்காவில் கடும் சூறாவளி தாக்குதல்;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமா பகுதியில் கடுமையான சூறாவளி காற்று வீசியதால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் , மரங்களும் பல சாய்ந்தன.
கிழக்கு அலபாமாவின் லீ பிராந்தியத்தில் ஏற்பட்ட டோர்னாடோ என்ற சுழிக்காற்று மணிக்கு 266 கிலோமீட்டர் வேகத்தில் வீசி பலரின் வீடுகளையும் , உடமைகளையும் நாசப்படுத்தியுள்ளது.மேலும் பலரின் வீடுகளின் மேல்கூரையும், பல வாகனங்களும் காற்றில் பறந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் 20-க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரண படையினர் சம்பவஇடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஒபெலிக என்ற இடத்தை மையம் கொண்ட இந்த சூறாவளியால் அந்த இடத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். மேலும் சிலரை காணவில்லை.

தற்போது இந்த சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. இந்த சூறாவளியால் பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் தேடுதல் பணிகள் மேற்கொள்வது மிகவும் கடினமானதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்நகரத்தில் பல வீடுகள் இடிந்து, கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் மேற்க்கூரைகள் காற்றில் பறந்தும் சேதமடைந்துள்ளன.
மரங்களின் கிளைகள் விழுந்தும் , மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டித்தும் காணப்படுகிறது.
மேலும் கடுமையான சூறாவளி வீசக்கூடும் என்ற எச்சரிக்கையால் அலபாமாவில் சூறாவளி அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.















