கொலம்பியாவில் நடந்த அதிர்ச்சி…! ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி!
9 military men dead in Columbia, helicopter crash
போகோடா:
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலியாகினர்.
மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுக்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந் நிலையில், அந்நாட்டின் தென்கிழக்கே குவாய்வியார் மாகாணத்தில் பதுங்கிய கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இதற்காக யூஎச்-60 ரக பிளாக்ஹாக் ஹெலிகாப்டரில் 17 வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.
வீரர்கள் பயணம் செய்த இந்த ஹெலிகாப்டர் அங்குள்ள இனிரிடா என்ற ஆற்றுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் இனிரிடா ஆற்றுப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கோரவிபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 2 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாகவும் கொலம்பியா ராணுவம் தெரிவித்துள்ளது.