
ராஞ்சி:
மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஆங்காங்கே மனிதர்கள் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களும் நின்றுவிடும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் எச்சரித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் அருகே பசுமாடுகளை ஏற்றிச் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்களை, பசு காவி குண்டர்கள் கொடூரமாகத் தாக்கினர்.
இதில் ரக்பர் கான் என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசு காவி குண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அப்பாவிகளை தாக்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில், நாடாளுமன்றம் தனிச்சட்டம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ரக்பர் கான் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்ததால், ராஜஸ்தான் மாநில பாஜக அரசு மீது, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மாடாக இருப்பதில் இருக்கும் பாதுகாப்பு, மனிதராக இருப்பதற்கு இல்லையா? என்று தலைவர்கள் பலரும் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்தான், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் பேசியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ்குமார், நாட்டில் பசுப் பாதுகாவலர்களால் பசுமாடுகளைக் கடத்திச் செல்பவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது;
மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஏன் இந்தக் குற்றம் நடக்கப்போகிறது? என்ற அறிவுப்பூர்வமான! கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
மேலும், ‘பசுமாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், அடித்துக்கொல்லும் குற்றம்,உள்ளிட்ட பல குற்றங்கள் தடுக்கப்படும்’ என்றும் அவர் மிகுந்த ஆணவத்துடன் கூறியுள்ளார்.
இந்திரேஷ் குமாரின் இந்தப் பேச்சு மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.