கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60) அமெரிக்காவின் “வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தார். அவர் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2-ந் தேதி சென்றார். அனால் அவர் அங்கிருந்து திரும்பவில்லை. 17 நாட்கள் ஆகியும் அவர் திரும்பாத நிலையில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக சவுதி அரேபியா ஒப்புக்கொண்டது.
சவுதி அரேபிய மன்னராட்சியையும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.
முதலில் ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி அரேபியாவின் தகவலை ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இப்போது சவுதி அரேபியாவின் தகவல்கள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அவர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசுகையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கசோக்கி படுகொலையில் சதி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.
அமெரிக்கா நேரடியாக கசோக்கி படுகொலை தொடர்பான விசாரணையில் துருக்கியில் களம் இறங்குகிறது. அமெரிக்க மத்திய புலனாய்வு படை சி.ஐ.ஏ.யின். இயக்குனர் ஜினா காஸ்பெல் துருக்கி விரைந்தார்.
துருக்கி நாடாளுமன்றத்தில் அதிபர் எர்டோகன் நேற்று பேசினார். அப்போது அவர் கசோக்கி படுகொலை விசாரணை குறித்த உண்மைகளை வெளியிட்டார். அவர் கசோக்கி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக சவுதி அரேபிய தூதரகம் அருகேயுள்ள காட்டினை சவுதி அரேபிய ஏஜெண்டுகள் பார்வையிட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இந்த காட்டில் துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். இரு மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரி இல்லத்தில் இருந்த கிணற்றில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது என துருக்கி எதிர்க்கட்சி தலைவர் கூறியதாக டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல், சவூதி அரேபிய தூதர் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.