ஐபிஎல் போட்டிகள் தேதிகள் அறிவிப்பு: செப். 19 தொடங்கி நவம்பர் 8 வரை நடக்க ஏற்பாடு!
IPL Cricket series date announced
துபாய்:
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8 ந்தேதிவரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும்.
துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதி விவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கும், அட்டவணையை அங்கீகரிப்பதற்கும் ஐபிஎல் ஆட்சிக்குழு அடுத்த வாரம் கூடுகிறது. ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.
மொத்தம் போட்டிகள் 51 நாட்கள் நடைபெறும், இது உரிமையாளர்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் பொருந்தும் என பெயர் வெளியிட விரும்பாத மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.