சட்டவிரோத பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சட்டவிரோத பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவுகள் காகித அளவிலேயே இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலை பகுதியில் அனுமதி இன்றி பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ராட்சத விளம்பர பலகைகள்,பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் டி.எஸ் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக பலமுறை உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லையா? என்று வினவிய நீதிபதிகள், பல உத்தரவுகள் காகித அளவிலேயே உள்ளன என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தாலும் உண்மை நிலை வேறாக இருப்பதாகவும் உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றியே கூட பேனர்கள் வைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
விதிமீறல் பேனர்கள் வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால் அந்த அமர்வுக்கே இந்த வழக்கையும் மாற்ற நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.