திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்….! பிறந்த நாளில் மரணம்!
DMK mla anbazhagan died
சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (62 வயது) காலமானார்.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் ஜெ.அன்பழகன். திமுக கட்சிப்பணிகளில் தீவிரமாக பணியாற்றிய ஜெ.அன்பழகன் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 2001ல் தி.நகரிலும், 2011, 2016ல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் தென்சென்னை மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். கட்சிப்பணிகளை திறம்பட செய்து முடித்து தலைமையிடம் பாராட்டு பெறுபவர். மனதில் படும் கருத்துக்களை துணிச்சலாக தெரிவிக்கும் குணம் கொண்டவர் ஜெ.அன்பழகன்.
கட்சிப்பணிகளுக்கு மத்தியில் ஜெ.அன்பழகன் திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்து வந்தார். அன்பு பிக்சர்ஸ் என்ற பெயரில் ஜெயம் ரவியின் ஆதி பகவன், யாருடா மகேஷ் படத்தையும் தயாரித்தவர். இன்று தமது பிறந்த நாளில் அவர் உயிரிழந்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.