விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனை ஏற்பட்டது.
அந்த பகுதியில் உள்ள 3 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது குறித்து பிரதமர் மோடியும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் விஷவாயு கசிவு குறித்து இரங்கல்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: உடனடியாக நமது காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.