பல்கலைக்கழகதுணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில முதலமைச்சர் வசம் இருக்கும்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துபல்கலைக்கழகங்களுக்கும், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்க 10 சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த சட்டங்களை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது.இதை எதிர்த்து, திருநெல்வேலி சேர்ந்த பாஜகவின் வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழக முதல்வரை நியமிக்கும் வகையில், கடந்த 1994 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாமல், தமிழ்நாடு அரசு புதியதாக சட்டத்திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. இது பேரவையின் விதிகளுக்கு எதிரானது என அந்த வழக்கில் மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல தமிழக அரசின் இந்த மசோதாக்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்றும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் இந்த சட்டங்கள், சட்ட விரோதமானவை என்று அறிவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம்,
சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், வி லட்சுமண நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்டசட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்துஉத்தரவிட்டனர்.இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்கி தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில முதலமைச்சர் வசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.