நியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர். அந்த அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றிப்பயணம் மேற்கொண்டுள்ளது.
நயூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் நகரில், ஹாக்லே பூங்கா அருகே உள்ள மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி அருகே மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் தொழுகை நடத்த சென்றபோது அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து நூலிழையில் அனைவரும் உயிர்தப்பியுள்ளனர்.
இது குறித்து, வங்கதேசம் கிரிக்கெட் வீரர் முகமது இசாம் தனது ட்விட்டரில், வங்கதேசம் அணி முழுவதுமாக துப்பாக்கிச் சூடு நடந்த ஹாக்லே பார்க்கில் இருந்து ஓவல் என்ற இடத்திற்கு ஓடி தப்பித்து உயிர்பிழைத்ததாகவும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து – வங்கதேசம் இடையேயான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.