என்ஜினியரிங் கல்லூரிகள் ஆக.16ல் தொடக்கம்…! ஏஐடிசிஇ அறிவிப்பு!
Engineering colleges to start from aug16

டெல்லி:
நாடு முழுவதும் பொறியியல் கல்லூரி வகுப்புகள் ஆக. 16ம் தேதி முதல் தொடங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ அறிவித்து இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் காலமும் கடந்துவிட்டது.
இந் நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇயின் 62வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சில முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம்? என்ற புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:
பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும்.
என்ஜினீயரிங் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றை ஆகஸ்டு 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு என்பது செப்டம்பர் 10-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். மொத்தத்தில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடித்துவிடவேண்டும்.
ஏற்கனவே என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்(பழைய அட்டவணையில் ஆகஸ்டு 1-ந்தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது). புதிதாக என்ஜினீயரிங் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ந்தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கலாம்.
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள முதுகலை டிப்ளமோ மற்றும் முதுகலை சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகள் ஜூலை 15-ந்தேதி தொடங்கலாம். இந்த படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு கடைசி தேதி ஆகஸ்டு 10-ந்தேதி ஆகும். நடப்பாண்டு கல்விக்காலம் என்பது ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















