3 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்களை நீட்டியுங்கள்…! மத்திய அரசுக்கு சோனியா கோரிக்கை!
Sonia writes letter to PM Modi

டெல்லி:
ஏற்கனவே வழங்கப்பட்டதைப் போலவே மேலும் 3 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஏழை எளிய மக்கள் பலரும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இவர்களில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டன.
மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராத பிறமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதே போல நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.
ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை வழங்கப்பட்ட இந்த உணவு தானியங்கள், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் வரை வழங்கவேண்டும்.
இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளன. எனவே மத்திய அரசு இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கணக்கில் வராத சில குடும்பங்களுக்காக தற்காலிக ரேஷன் அட்டைகள் வழங்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
















