
புது தில்லி:
ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில்,
பாஜக அரசுக்கு காங்கிரஸ் சொன்ன யோசனைகள் எதுவும் ஏற்கப்படவில்லை என்றும் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
புது தில்லியில் இன்று சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேற்க்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
நான் இப்போது உங்களுக்கு சொல்லப்போகும் தகவல் ஒவ்வொரு இந்தியரும் கவலைப்பட வேண்டிய விஷயமாக இருக்கும்.
கொரோனா தொற்றை நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய இந்த சூழ்நிலையிலும் கூட, பாஜக அரசு, தொடர்ந்து மதவெறுப்புணர்வு, சமுதாயத்தில் பிளவு எனும் தொற்றுகளைப் பரப்பி வருவது மிகுந்த கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
சமூக ஒற்றுமையை மத்திய அரசு சிதைத்து வருகிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி அதனை சீராக்க தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறது நம் அனைவருக்கும் தெரியும்.
ஊரடங்கு உத்தரவால் சுமார் 12 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மோசமான சூழ்நிலையைக் கையாள அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக உடனே அளிக்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.















