வீட்டில் 10ம் வகுப்பு மாணவர் உள்ளாரா? அமைச்சரின் அறிவிப்பு உங்களுக்குத் தான்…!
Minister sengotaiyan announces e pass
சென்னை:
எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இ-பாஸ் வழங்கப்படும்.
வெளிமாவட்டங்களில், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்படும். பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
இதனிடையே, வெளிமாவட்டங்களில் தங்கியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், 10ம் வகுப்பு தேர்வை முன்னிட்டு, வரும் 21ம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்ற பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அவர்கள், சொந்த மாவட்டத்திற்கு திரும்பியதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். திரும்பாத ஆசிரியர்களின் விவரங்களை 21ம் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.