மத்திய அரசு அனுமதிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை – ராஜீவ் சுக்லா !
மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என ராஜீவ் சுக்லா இன்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லா மத்திய அரசு அனுமதி கொடுக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்த நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதாக தெரிவித்தார். விளையாட்டு என்பது அனைத்துக்கும் அப்பாற்பட்டது என்ற போதிலும், தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பது விளையாட்டையும் பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை தான் கடந்த காங்கிரஸ் அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளதை பல ஆவணங்கள் மூலம் நிரூபித்துள்ளது. இதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.
2019 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா-பாக்கிஸ்தான் அணிகள் இணைந்து விளையாடுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு,
உலகக் கோப்பை நடைபெற இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. அப்போது பார்த்துக்கொள்ளலாம். அதற்குள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தட்டும் என்று கூறினார்.