கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்…! தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!
Stalin urges cm palanisamy
சென்னை:
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளின் படி கொரோனாவில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
கோவிட்-19” கொடிய நோய்த் தொற்றைத் தடுப்பதில் படுதோல்வியடைந்து – “கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்” என்று இயலாமையால் கைவிரித்து நிற்கும் முதல்வர் பழனிசாமி ஜூன் 19ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது பின்பற்றி, தமிழக மக்களை கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திட முன்வர வேண்டும்.
நாடு முழுவதும் கோவிட்-19 நோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, “நோய்க் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை” நடவடிக்கைகளில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திட மாநிலங்களுக்கு மிக முக்கியமான கட்டளைகளை இந்திய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்திருப்பது, சமூக அக்கறையுள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கது.
குறிப்பாக, இந்த வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிமுக அரசின் பிடியில் சிக்கி – தினமும் பதற்றத்திலும் அச்சத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய தீர்ப்பு அது. ஜூன் 12ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி, அதிமுக அரசு பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது- அன்றைக்கு 6,32,256 ஆக இருந்த “கொரோனா பரிசோதனை” செங்குத்தாக 12 லட்சத்திற்கு இன்று வரை உயரவில்லை என்பதிலிருந்தே தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் உயிர் காக்கும் உத்தரவையே, சரியாகப் புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்து, அதிமுக அரசு புறக்கணித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா சோதனை செய்யாமல்- இந்த நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தானாகவும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு மனப் பக்குவம் இல்லை. அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை பெறவும் அவருக்கு ஜனநாயக ரீதியான எண்ணம் இல்லை.
எந்தப் பக்கம் இருந்து ஆலோசனைகள் வந்தாலும் அவற்றை ‘அரசியல்’ என்று மிகச் சாதாரணமாக அலட்சியப்படுத்திவரும் முதல்வர், இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது- ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி- தமிழக மக்களைக் காப்பாற்ற, அவற்றை முறையாக அணுகி- உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.