ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதி வழங்கும் திட்டம் ;நடுத்தர மக்களுக்கு சுமை ஏற்படாது – ராகுல்காந்தி பேச்சு
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளித்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பரம ஏழை மக்களுக்கு மாதம் தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என சமீபத்தில் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவது முடியாத ஒன்று என்று பொருளாதார வல்லுனர்களின் ஒரு தரப்பினரும், சாத்தியமானதுதான் என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தேவைப்படும் நிதி தேவைகளை சமாளிக்க வருமானவரியை உயர்த்தவோ , நடுத்தர மக்களின் சுமையை அதிகரிக்கவோ மாட்டோம் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தினை செயல்படுத்த தேவையான நிதி தேவைக்கு எல்லா வகையான கணக்கீடுகளும் போட்டு பார்த்து விட்டோம்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் கேட்டுத்தான் உருவாக்கப்பட்டது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.