பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் !
தமிழகத்தையே நிலைகுலையச் செய்துள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி-க்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ளது. வீடியோ காட்டி பணம் பறிப்பதும், அல்லது பாலியல் தேவைகளுக்கு பெண்களை பயன்படுத்துவதும் தான் இவர்களின் கொடூர நடத்தை என்ற திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது.
அதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அந்த கும்பலை சேர்ந்த சபரிராஜன் (வயது 25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தக் கும்பல் இளம் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியானது. அந்த வீடியோ தமிழ்நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் நெஞ்சை பதற செய்துள்ளதாக கூறி தங்களின் கோபத்தை நெருப்பாக உமிழ்கின்றனர். இந்த பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். திருநாவுக்கரசுவுக்கு ஜாமின் கேட்டு அவரது தாயார் பொள்ளாச்சி ஜே.எம்.1., கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.