தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் !
தமிழக தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறை மற்றும் அரசு இயந்திரங்களை கொண்டு சோதனை நடத்துவதை பார்க்கும் போது, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதோ என்று தோன்றுகிறது. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்காது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி. சத்திய மூர்த்தி வழிகாட்டுதலின் படி, போலீஸ் வாகனங்களில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிப்பதாகவும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். இந்தப் போலீஸ் அதிகாரிகள் தாமதமின்றி உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும்.
உயர்பதவியில் இருக்கக்கூடிய ஐ.ஏ.எஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்காவிட்டால் ஜனநாயகம் தோல்வி அடையும் என ஆர்.எஸ்.பாரதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.