நடிகை ரம்யா கிருஷ்ணன் 103 மது பாட்டில்களுடன் காரில் பிடிபட்டார்!
சென்னை:
பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில், 103 மது பாட்டில்களுடன் பிடிபட்டார்.
ஓட்டுனரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு சந்திப்பில், கானாத்துார் காவல் நிலைய போலீசார், நேற்றைய முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த, ‘இன்னோவா கிரிஸ்டா’ காரை மடக்கி பிடித்தனர்.
காரின் உள்ளே நடிகை ரம்யாகிருஷ்ணன் இருந்தார். போலீசார், காரை சோதனை செய்தபோது, 103 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து, ரம்யா கிருஷ்ணனிடம் போலீசார் கேட்டபோது, அவர், தனக்கு எதுவுமே தெரியாது என, கூறியுள்ளார்.
ஓட்டுனர், அபிராமபுரத்தை சேர்ந்த செல்வகுமார், 38, என்பவரிடம் விசாரித்த போது, செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் உள்ள, ‘டாஸ்மாக்’ கடையில் இருந்து, மது வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, செல்வகுமாரை கைது செய்த போலீசார், 103 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
வேறு ஓட்டுனர் வந்து, ரம்யாகிருஷ்ணனை அதே காரில் அழைத்து சென்றார்.
நடிகையின் காரில் மது பாட்டில்கள் இருந்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..