டாஸ்மாக்கில் ‘கை’ வைத்த தமிழக அரசு…! மதுப்ரியர்கள் அதிர்ச்சி
liquor price hike in tamilnadu

சென்னை: தமிழகத்தில் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மே 17 வரை 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
அதனால், அரசுக்கு தினமும் ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்தன. இதையடுத்து, தமிழக அரசு நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.
இந் நிலையில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால் சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.10 கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.20 கூடுதலாகவும் 07.05.2020 முதல் உயர்த்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.















