ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது மத்திய அரசு !
மத்திய அரசு, ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதை தடுக்கும் நோக்கில், புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும் என்றும், தங்களிடம் மட்டுமே குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி, அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது எனவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என எந்த விற்பனையாளரையும் வற்புறுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் விற்பனையாளர் தங்களிடம் உள்ள பொருட்களில் 25 சதவீதம் பொருட்கள் மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேஷ்பேக் தள்ளுபடி அளிக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பாரபட்சம் பார்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாக மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.