fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தார். குறைந்த பட்சமாக ரூ.8,400, அதிகபட்சமாக ரூ.16,800 போனசாக கிடைக்கும். 3 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ. 486.96 கோடி போனஸ் வழங்கப்படும்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் நடைபெற்று வரும் அம்மாவின் அரசு தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமுமே நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

இதனால் தொழிலாளர்கள் பயன்பெரும் வகையில், திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- என உள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2017-18ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித் தொகையிணை கீழ்க்கண்டவாறு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இலாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்கள், இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்கள், ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்கள் ஆகிய அனைவரும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகையோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ
வழங்கப்படும்.

நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள், பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்கள், ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000/- ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000/- ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000/- ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400/- ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8,400/-ம் அதிகபட்சம் ரூ.16,800/-ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 58ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.
அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வழி வகை செய்யும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close