கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்….
“சமவேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்ற உறுதியுடன் கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் இன்று 6-வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் போது 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குணமடைந்த பின்னர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் பழனிசாமி தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடப்போவதாகவும், அரசு தரப்பில் தங்களுக்கு சாதகமான பதில் வரவில்லையென்றால் சாகும் வரை தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை தொடரப்போவதாகவும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.