சாத்தான்குளம் சம்பவம்..! அனைவரையும் கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்!
Stalin statement about sathankulam incident
சென்னை:
சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் கொலையில் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயன்ற அதிமுக அரசின் அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாக்கப்பட்டு இருக்கிறது.
நீதிமன்றத்தின் தலையீட்டினால் சட்டத்தின் முன் வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், நீதிமன்றம், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக்கொண்டது.
இந்த வழக்கில் சிலரைக் கைது செய்துவிட்டு, அனைவரது வாயையும் மூடிவிடலாம் என்று அரசு தப்புக்கணக்கு போட்டுவிடக் கூடாது. அனைத்து தரப்பினரும் கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள். கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்ட வேண்டும்.
மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்தவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். முதலமைச்சரின் கடமை முடிந்துவிடவில்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார்.