கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது:மெட்ரிக் பள்ளி இயக்குனர் அறிவிப்பு
கோடை விடுமுறை காலங்களில் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்ததுடன் சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளார்.
இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சுற்றறிக்கையில் கோடை விடுமுறை காலங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது பற்றி பெற்றோர் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விடுமுறை காலங்களில் தான் உறவினர்களோடு பழகவும், உறவுகளை தெரிந்து கொள்ளவும் மாணவ ,மாணவிகளுக்கு நேரம் கிடைப்பதால் இந்த கோடை விடுமுறை காலம் என்பது அவசியம் ஆகும்.
கோடை காலங்களில் வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட கூடும். அதனால் மாணவர்களுக்கு கட்டாயம் ஓய்வு என்பது அவசியம். எனவே மாணவர்களின் நலன் கருதித்தான் தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவ மாணவிகளுக்கு கோடை காலங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.