நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிக்கு மன நல பரிசோதனை நடத்த உத்தரவு!
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் இந்தியர்கள். 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய பயங்கரவாதி பிரெண்டன் டாரன்ட்க்கு மனநல பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதல் உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாக்குதலை நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது ஒரே ஒரு கொலை குற்றச்சாட்டு மட்டும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பிரெண்டன் டாரன்ட் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் நீதிபதி பதிவு செய்தார்.
இன்று காலை மீண்டும் பிரண்டென் டாரன்ட் நீதிபதி முன் வீடியோ கான்பரன்ஸிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். இரு கைகளிலும் விலங்கிட்ட படி பிரெண்டன் டாரண்ட் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மன நல பரிசோதனை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜூன் 14-ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.