தமிழகத்தில் மட்டும் ரூ.285.86 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் பணப்புழக்கம் அதிக அளவில் காணப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலை ஒட்டி வாக்காளர்களை விலைக்கு வாங்க பல்வேறு அரசியல் கட்சிகள் ரொக்கப் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் பெட்ரோல் கூப்பன்களையும் அள்ளி வீசுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகள் மேற்கொண்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஏடிஎம்களில் போட கொண்டு செல்லப்படும் வங்கி பணமும், வியாபாரிகள் கொண்டு செல்லும் பணமும்தான் பறிமுதல் செய்யப்படுகிறது என்று பொதுமக்களிடம் கடும் அதிருப்தி நிலவி வந்தது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக இதுவரை ரூ.1,618 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.285.86 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது