ஆண்டிபட்டி அருகே பரபரப்பு; அதிமுக நிர்வாகி எரித்து கொலை…
ஆண்டிப்பட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.வி. ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை மகன் சதீஸ் குமார் (வயது 24). இவர் அ.தி.மு.க. ஆண்டிப்பட்டி ஒன்றிய மாணவர் அணி துணைச் செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இரண்டு கார்கள் வைத்து அதனை வாடகைக்கு விட்டு ஓட்டி வந்தார்.
இன்று காலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்தும் அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சதீஸ்குமார் தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அப்பகுதியில் வேறு ஏதேனும் சந்தேகப்படும்படியான தடயங்கள் உள்ளதா? என சோதனை நடத்தினர். சதீஸ்குமாருக்கு குடிப்பழக்கம், சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
தொழிலில் மட்டுமே அக்கறையுடன் இருந்து வருவார். இது போன்ற சூழலில் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டியா? அல்லது முன் விரோதமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.