சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்கள் வறட்சி பகுதியாக பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு!
சென்னை:
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் பெய்த மழையளவு பகுப்பாய்வு செய்யப்பட்டது.
அதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை அளவில் மழைப்பொழிவை பெற்றுள்ளன.
அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே இந்த வட்டாரங்கள் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.
அதுபோல மழைப்பொழிவை குறைவாக பெற்றுள்ள இடங்கள் வருமாறு,
சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.