பட்டம் விட்டால் பாயும் குற்றவியல் நடவடிக்கை…! பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
Coimbatore collector warning

கோவை: பட்டம் விடும் குழந்தைகளின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரொனா எதிரொலியாக 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் முடக்கத்தால் மக்கள் ஏற்கனவே வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இப்போது கோடை காலம் என்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால், வீட்டில் உள்ள சிறுவர்கள் பொழுது போகாமல் பட்டம் செய்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சிறுவர்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டுமென கோவை ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் சிலநாட்களாக பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பட்டம் விட்டு விளையாடுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர்மட்ட மின்பாதையில் சிக்கி பெரும் பிரச்சனை ஏற்படுத்திவிடும். அதனால் மின் தடை ஏற்படும் மின்சார வாரியத்துக்கும் பெரும் சிக்கலாகி விடும்.
மேலும், சாலையில் செல்லும் மக்களின் மீது பட்டத்தின் கயிறு சிக்கி பெரும் ஆபத்து ஏற்படுத்திவிடும் என்பதால் பட்டம் விடுவதைக் கைவிட வேண்டும். இதை மீறி பட்டம் விடும் குழந்தைகளின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.















