வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி:வேட்புமனு தாக்கல் செய்தார்!
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்காவுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று காலை கோழிக்கோடு விமான நிலையம் வந்த ராகுலுக்கு காங்கிரசார் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா நகருக்கு சென்றவர், பின்னர் வாகனம் மூலம் பேரணியாக கலெக்டர் அலுவலகம் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வயநாடு வந்த ராகுல்காந்திக்கு சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று உற்சாக குரலெழுப்பி வரவேற்பு அளித்தனர்.
வேட்புமனு தாக்கலின்போது, ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர். ராகுல்காந்தி பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் இருந்தது பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
ராகுல்காந்தி வயநாடு வந்ததையொட்டி, அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.