கொரோனாவால் நிகழும் மாற்றங்கள்….! பாகிஸ்தானில் 3வது முறையாக சுகாதார அமைச்சர் மாற்றம்!
Pakistan PM imran khan appoint new health minister
இஸ்லாமாபாத்:
கொரோனா தொற்று எதிரொலி பாகிஸ்தானில் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளது.
கொரோனா விவகாரத்தில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தானின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்த ஜாபர் மிர்சா கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
இந் நிலையில் பாகிஸ்தானின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் பைசல் சுல்தான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் நியமித்துள்ளார். மருத்துவம் மற்றும் தொற்று நோய்கள் குறித்த ஆலோசகர் டாக்டரான பைசல் சுல்தான் 1987ம் ஆண்டு நாகூரில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவ பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
மேலும் சர்வதேச மருத்துவம் மற்றும் தொற்று நோய் சிகிச்சையில் 2 முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார். பாகிஸ்தானில் 2 ஆண்டுகளில் 3-வது முறை சுகாதார துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.