fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

‘கஜா’ புயலால் முற்றிலுமாக வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் – ரஜினி மக்கள் மன்றம்!

கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. தென்னை மரங்கள், விவசாய நிலங்கள், வீடுகள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமாகின. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு மாதத்தைக் கடந்தும் அம்மாவட்டங்களில் நிலைமை இன்னும் முழுமையாக சீரடையவில்லை.

இதையடுத்து கஜா புயல் நிவாரணமாக அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் நிவாரண நிதி, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே ரஜினி மக்கள் மன்றம் மூலமாக வழங்கினார்.

தற்போது கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஜினி மக்கள் மன்றம் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒன்றரை மாத காலமாக தொடர்ந்து நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது.

‘கஜா’ புயலால் குடிசை வீடுகளை முற்றிலும் இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை கட்டித்தர நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என தலைவர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத் துறை, கோடியக்காடு, கோடியக்கரை மீனவ கிராமங்களில் குடிசை வீடுகளை முற்றிலுமாக இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தலா ரூ. 1,50,000 செலவில் சிமெண்ட் பூச்சு ஓட்டு வீடுகளை கட்டித்தர முடிவு செய்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தலைவரின் விருப்பப்படி இரண்டு மாத காலத்திற்குள் பயனாளிகளுக்கு இந்த வீடுகள் கட்டித் தரப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close