தேசிய கிராமப்புற வேலை உறுதி
- கருவேல மரங்களை அகற்றுவது குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
- இந்த திட்டம் குறித்து மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு
- மகாந்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு
- தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹு, கிராம மக்கள் சீமை கருவேல மரங்களை விறகாக பயன்படுத்துவதாகவும், செங்கற்சூளைகள் போன்ற ஆலைகளும் இதை எரிபொருளாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
சீமை கருவேலமரங்களின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர், பசுமைக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் இந்த மரங்கள் வளர்க்கப்பட்டதாகவும், சீமைக் கருவேலமரங்களின் தழைகளை கால்நடைகள் உண்பதாகவும், அதிகளவில் உட்கொண்டால் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்றார்.
அப்போது வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, வனப்பகுதியில் இந்த மரங்கள் வளர்வதால் பிற மரங்களை வளரவிடுவதில்லை எனவும், யானைகள் போன்ற வன விலங்குகள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றும் இந்த சீமைக் கருவேலமரத்தால் பாதிப்பில்லை என கூற முடியாது எனவும் விளக்கினார்.
வனப்பகுதியில் பாதிப்பு என்றால் அகற்றிவிட்டீர்கள் மற்ற இடத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். சீமை கருவேல மரங்களை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், உண்மையிலேயே இந்த மரங்களை அகற்றும் நோக்கம் அரசுக்கு உள்ளதா, இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.
ராஜஸ்தான் போன்ற மற்ற மாநிலங்கள் என்ன நடைமுறை பின்பற்றுகின்றன என ஆய்வு செய்ய வேண்டும் எனவும், மற்ற மாநிலங்களில் இல்லாவிட்டால் தமிழகம் முன்மாதிரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகத்தை சீமைக் கருவேல மரங்களில்லாத மாநிலமாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இறுதியில், இந்த மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்பு உறுதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக தெரிவித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், தமிழக அரசு சொந்த நிதியை பயன்படுத்த உள்ளதாகவும், சீமை கருவேலம் மரங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது பொதுத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதிகள், மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.