கொரோனா வைரஸ் நெருக்கடியால் சீனாவை விட்டு வெளியேற விரும்பும் சுமார் 100 அமெரிக்க நிறுவனங்களுடன் உத்தரபிரதேச அரசு தொடர்பு கொண்டுள்ளது என்று அம்மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்தார். மேலும் அவர் அந்த நிறுவனங்கள் உத்தரபிரதேசத்திற்கு வர ஆர்வம் காட்டியுள்ளன என்றும் கூறினார்.
அமெரிக்காவின் முக்கிய தொழில் நிறுவனங்கள் சீனாவில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அந்த நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தவும், அவற்றை இந்தியாவுக்கு, குறிப்பாக உத்தரப்பிரதேசத்திற்கு எவ்வாறு கொண்டு வர முடியும் என்பதை பிரதமரும் முதலமைச்சரும் கூர்ந்து கவனித்து வருவதாக சித்தார்த் நாத் சிங் தெரிவித்தார்.
இந்த அமெரிக்க நிறுவன தளவாடங்கள், விஞ்ஞான கருவிகள், மின்னணு மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்தவை என்றும் அவற்றை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கொண்டு வருவதன் மூலம் நம் நாட்டில் நல்ல ஒரு முன்னேற்றமானது ஏற்படும் என்று நம்புகின்றனர்.