4 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு!சென்னையில் மக்கள் கூட்டம்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி !!
சென்னை:
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்றுவரை, நான்கு நாட்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
இன்று காலை முதல் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மதியம் ஒரு மணி வரை கடைகள் திறந்து இருக்கலாம் என்பதற்கு பதிலாக, இன்று ஒரு நாள் மட்டும், மாலை 5 மணி வரை கடைகளை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்களாக பொருட்கள் வாங்க முடியாத மக்கள், ஒரே நாளில் கடைகளில் சென்று குவிவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது..
இருப்பினும், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் இன்று வழக்கத்தை விட கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சில இடங்களில், போதிய அளவுக்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
ஆனால், சில இடங்களில் அவையும் கடைபிடிக்கப்படவில்லை. இந்த நான்கு நாட்கள் முழு ஊரடங்கு சென்னையில் அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கையும் மிக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
இருப்பினும், ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டதும் மக்கள் இவ்வாறு கடைகளில் சென்று கூட்டம் கூட்டமாக கூடுவது சென்னையை பொறுத்த அளவில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
மக்கள் அரசு கூறுவதை கேட்கவேண்டும், ஆனால் கடைகளில் கூட்டம் அதிகமாக சேருகிறது என்று சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.