உ.பி யில் லாரி மோதி பயங்கர விபத்து ;புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி!
24 migrants killed in road accident in Uttar Pradesh’s Auraiya

லக்னோ:
உத்தர பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு லாரியில் செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகையால் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
தற்போது தொழிலாளர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனாலும் நடந்து செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. மேலும் சில தொழிலாளிகள் கிடைக்கும் வாகனங்களில் ஏறி சொந்த ஊர் செல்கின்றனர்.
அப்படித்தான் ராஜஸ்தானில் இருந்து சொந்த ஊர் செல்ல லாரியில் பயணித்தனர் சில தொழிலாளர்கள். அவர்களது வாகனம் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆரையா என்ற பகுதிக்கு வந்தபோது எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் உறங்கிய தொழிலாளர்கள் சிலர் இறந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள், மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.















