இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் முன் அபிநந்தனிடம் வாக்குமூலம் பதிவு!
நேற்று மாலை 4 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு 9 மணிக்குதான் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்று தெரிய வந்துள்ளது. விடுதலைக்கு முன்பாக தங்கள் ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசும்படி அபிநந்தனை நிர்ப்பந்தித்துள்ள பாகிஸ்தான் அரசு அவர் பேச்சை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது.
அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் முன், அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் வீடியோ வாக்குமூலம் பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் அபிநந்தன் கூறியதாவது, பாகிஸ்தான் வான்வெளிக்குள் நான் இலக்கை நோக்கி பறந்தபோது, என்னுடைய விமானம் பாகிஸ்தான் விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன்பின் விமானத்தில் இருந்து வெளியே பறந்த நான், பாராசூட் மூலம் குதித்தேன். என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்தது.
நான் விழுந்த இடத்தில் ஏராளமான மக்கள் இருந்தனர். அவர்களிடம் இருந்து என்னை காத்துக்கொள்ள துப்பாக்கியை கைவிட்டு, நான் ஓட முயற்சித்தேன். மக்கள் என்னைத் துரத்தினார்கள், அவர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் என்னை அவர்களிடம் இருந்து மீட்டனர். என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் அவர்களின் முகாமுக்கு கொண்டு சென்று, எனக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் என்னை மக்கள் கூட்டத்தில் இருந்து காப்பாற்றினார்கள். பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகுந்த நேர்த்தியாகவும், அவர்களின் நடத்தை நல்லவிதமாகவும் இருந்தது என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.