அடி தூள்…! தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.15…! திருமழிசை சந்தையில் குறையும் விலை
Vegetable prices slashed in thirmazhisai market

சென்னை: திருமழிசை மார்க்கெட்டில் நேற்றை விட இன்று காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் திருமழிசையில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சந்தையில் வியாபாரமும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
450 லாரிகளில் சுமார் 6000 டன்கள் வரை காய்கறிகள் வந்து இறங்குகின்றன. இந்த காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது.
பொதுமக்கள் நேரில் சென்று காய்கறிகள் வாங்க அனுமதி கிடையாது. காய்கறிகளின் விலையை பார்த்தால் துவக்கப்பட்ட முதல் நாளைவிட இன்று விலை சரிந்துள்ளது.
தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு ரூ 25, பெரிய வெங்காயம் ரூ 15, கத்தரிக்காய் ரூ. 20, வெண்டைக்காய் ரூ. 25, முள்ளங்கி ரூ.20, பீன்ஸ் ரூ.60 என அனைத்து காய்கறிகளும் விலை குறைந்துள்ளன.
காய்கறிகள் வரத்து ஒரு பக்கம் இருந்தாலும் அதை வாங்கிச் செல்லும் சிறுவியாபாரிகள் போதிய போக்குவரத்து இன்றி அவதிப்படுகின்றனர். எனவே சென்னை மாநகர போக்குவரத்து கழகம், திருமழிசை சந்தைக்கு சென்று வர போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















